ADDED : மே 26, 2024 12:31 AM
மதுரை:தஞ்சாவூர் மாவட்டத்தில், செம்மண் திருட்டில் ஈடுபட்டதாக பாக்கியராஜ் என்பவர் மீது செங்கிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும், அனுமதியின்றி சட்ட விரோதமாக குவாரி நடத்தியதாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்தனர். கைதான இருவரும் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், 'மனுதாரர்கள் அப்பாவிகள். சம்பவத்திற்கும் மனுதாரர்களுக்கும் தொடர்பில்லை' என, வாதிட்டனர்.
அரசு தரப்பில், 'அரவக்குறிச்சி வழக்கில் விசாரணை முடியவில்லை. செங்கிபட்டி வழக்கில் ஜாமின் அனுமதிக்கக்கூடாது' என, விவாதம் நடந்தது.
நீதிபதி உத்தரவில், 'ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றங்களில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். போலீசில் ஆஜராக வேண்டும். கொட்டாம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியருக்கு 10,000 ரூபாய் திரும்ப பெற முடியாத தொகையை மேலுார் ஸ்டேட் வங்கி கிளை வாயிலாக பாக்கியராஜ் செலுத்த வேண்டும். அதே பள்ளிக்கு கிருஷ்ணமூர்த்தி 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்' என்றார்.