5 மாவட்டங்களில் சொந்த கட்டடம்: டி.டி.சி.பி., நடவடிக்கை
5 மாவட்டங்களில் சொந்த கட்டடம்: டி.டி.சி.பி., நடவடிக்கை
ADDED : ஜூலை 11, 2024 01:42 AM
சென்னை:சென்னைக்கு வெளியில் உள்ள பகுதிகளில் கட்டுமான திட்டங்கள், நகர்ப்புற திட்டமிடல் பணிகளை, டி.டி.சி.பி., மேற்கொள்கிறது. இதற்காக மண்டல அளவில் அலுவலகங்கள் இருந்தன. நிர்வாக நடைமுறையை எளிமைப்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு ஒரு அலுவலகம் அமைக்க, டி.டி.சி.பி., திட்டமிட்டது.
இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் துணை இயக்குனர் தலைமையில், தனித்தனி அலுவலகங்கள் துவங்கப்பட்டன. இவற்றுக்கு பொது மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், சொந்த அலுவலகங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.
கடந்த, 2021 - 2022 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட, 60 கோடி ரூபாயை பயன்படுத்தி, தென்காசி, அரியலுார், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விருதுநகர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சொந்த கட்டடம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. இதில் தென்காசி அலுவலக பணிகள் முடிந்துள்ளன.
இதையடுத்து, திருப்பத்துார், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவாரூர், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே டி.டி.சி.பி.,க்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் சொந்த கட்டடத்துக்கு நிலம் தேடும் பிரச்னை இல்லை.
திருவள்ளூர், தேனி, கரூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில், தனியாக நிலம் பெற்று, சொந்த கட்டடம் கட்ட முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், நிலம் கிடைக்காத நிலையில், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், டி.டி.சி.பி.,க்கு அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

