ADDED : ஆக 03, 2024 12:33 AM
சென்னை:'விவசாயிகள் நலன் கருதி, 2024 - 25ம் பருவத்திற்கான நெல் கொள்முதல், செப்டம்பர், 1 முதல் துவக்கப்படும்' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2002 - 2003 முதல் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அக்., 1 முதல் நெல் கொள்முதல் செய்து வந்தது.
விவசாயிகளின் நலன் கருதி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றதால், 2022 - 23 முதல், செப்., 1 முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நடப்பு, 2023 - 24 பருவத்தில், கடந்த மாதம் வரை, 3,200 நேரடி கொள்முதல் நிலையங்களில், 33.24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு, 7,277 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலன் கருதி வரும், 2024 - 25 பருவத்திற்கான நெல் கொள்முதல், செப்., 1 முதல் துவங்கப்படும். சன்னரக நெல் குவிண்டாலுக்கு, 2,450 ரூபாயும்; பொது ரக நெல் குவிண்டாலுக்கு, 2,405 ரூபாயும் வழங்கப்படும். எனவே, விவசாயிகள் செப்., 1 முதல் புதிய கொள்முதல் விலையில் நெல்லை விற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.