'தி.மு.க., பற்றி விமர்சிக்க பழனிசாமிக்கு தகுதியில்லை'
'தி.மு.க., பற்றி விமர்சிக்க பழனிசாமிக்கு தகுதியில்லை'
ADDED : ஜூன் 10, 2024 12:52 AM
புதுக்கோட்டை: ''அ.தி.மு.க., பற்றி விமர்சிக்க எனக்கு தகுதி இல்லை என்றால், தி.மு.க., பற்றி விமர்சிக்க முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது,'' என, புதுக்கோட்டையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் விமான கும்பாபிஷேக பாலாலய விழாவை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று துவங்கி வைத்தார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
'தனித்து வருவோம்' என்று சொன்னவர்கள் இன்று தனித்து விடப்பட்டுள்ளனர். கூட்டணியின் தயவு இல்லாமல் அவர்கள் ஆட்சியை நடத்த முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நிச்சயமாக இது நிலைத்திருக்கக்கூடிய ஆட்சியாக இருக்காது என்பது, அரசியல் வல்லுனர்களின் கருத்து.
'இண்டியா' கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி என்பது மகத்தான வெற்றி. 400 இடங்களில் வருவோம் என்று சொன்னவர்கள், 234 இடங்களுக்குள் தான் பெற்றுள்ளனர். ஆனால், எங்களது கூட்டணி சிறப்பான எதிர்க்கட்சியாக பணியாற்றக்கூடிய அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
அதனால், இண்டியா கூட்டணி இந்த வெற்றியை கொண்டாடுவதில் எந்த ஒரு தவறும் கிடையாது. அது மகிழ்ச்சியான ஒன்றுதான். தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் 40க்கு 40 என்ற முழக்கத்தோடு தேர்தல் களத்தை ஆரம்பித்து, 40க்கு 40 என்ற சபதத்தை நிறைவேற்றி உள்ளோம்.
தொடர்ந்து, பழனிசாமி அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் ஆனால், அந்தக் கட்சிக்குள் என்னென்ன நடக்கிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அ.தி.மு.க.,வை பற்றி விமர்சிக்கவில்லை.
ஆனால், தி.மு.க.,வை பற்றி பேசுவதற்கும், முதல்வர் பற்றி விமர்சிப்பதற்கும் பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது. அ.தி.மு.க., பற்றி பேசுவதற்கு எனக்கு நிச்சயம் தகுதி உண்டு. அ.தி.மு.க.,வில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகின்றன. என்னென்ன புரட்சி வெடிக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

