ADDED : ஜூலை 01, 2026 01:18 AM
மதுரை: அந்தந்த பகுதியை சார்ந்த விவசாயிகளின் நெல் மூடைகளை அருகிலுள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் மட்டுமே கொள்முதல் செய்வதை முறைப்படுத்த தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே மீனாட்சிபுரம் சேவுகன் தாக்கல் செய்த பொதுநல மனு: எங்கள் ஊர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் நெல் விளைவிக்கப்படுகிறது.
மதுரை கிழக்கு தாலுகாவில் அரசின் நெல் கொள்முதல் மையம் உள்ளது. நெல் மூடைகளை அங்கு விற்பனை செய்வதற்காக, வேறு பகுதியை சேர்ந்த மூன்றாம் நபர்களின் பெயரில் விவசாயம் செய்ததுபோல் அடங்கல் பதிவேட்டை வருவாய்த்துறையினர் வழங்குகின்றனர். இது சட்டவிரோதமானது.
ஒரு கிராமத்தில் உண்மையாக விவசாயம் செய்யும் நபர்களின் நிலங்களை அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்து, அக்கிராமத்திலுள்ள கொள்முதல் நிலையங்களில் மட்டும் நெல் மற்றும் இதர தானியங்களை விற்பனை செய்யவேண்டும்.
வேறு பகுதியை சார்ந்த நபர்களுக்கு அடங்கல் பதிவு செய்து கொடுக்கக்கூடாது.
அந்தந்த பகுதியை சார்ந்த கிராம விவசாயிகளின் நெல் மூடைகளை அருகிலுள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் மட்டுமே கொள்முதல் செய்வதை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.ஏ.அஜ்மல்கான் ஆஜரானார்.
நீதிபதிகள் மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக.3ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
