ADDED : ஏப் 10, 2024 11:32 PM
சென்னை:ராமநவமியை முன்னிட்டு, தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டத்தில் யாத்திரை செல்ல, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கேரளாவை சேர்ந்த ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் திலீப் நம்பியார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ராமநவமியை முன்னிட்டு, வரும் 12 முதல் 17 வரை, கேரள மாநிலம் மலப்புரம் வண்டூரில் இருந்து, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை வழியாக, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை, யாத்திரை செல்ல அனுமதி கோரினோம். சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி, அனுமதி மறுத்தனர். இதை ரத்து செய்து, யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''யாத்திரைக்கு நாங்கள் எதிராக இல்லை. கடந்த முறை ஒரு மாவட்டத்தில் மட்டுமே யாத்திரை நடத்தப்பட்டது. இந்த முறை 11 மாவட்டங்களில் யாத்திரைக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக, இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டது,'' என்றார்.
இதையடுத்து, 'ஏதாவது ஒரு மாவட்டத்தில் யாத்திரை நடத்திக் கொள்ளலாம்' என, நீதிபதி தெரிவித்தார். அதற்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில் யாத்திரை செல்ல அனுமதிக்கும்படி, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் யாத்திரைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவும், அதை பரிசீலித்து இரண்டு நாட்களில் போலீஸ் தரப்பு முடிவெடுக்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.

