ADDED : மார் 27, 2024 11:25 PM
சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. நாளை மறுதினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இத்தொகுதிகளில் கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது; நேற்று மாலை 3:00 மணியுடன் நிறைவடைந்தது.
நேற்று கடைசி நாள் என்பதால், ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். மாலை 3:00 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிட, 1,400க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கரூரில் அதிகபட்சமாக 62 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
விளவங்கோடு சட்டசபை தொகுதியில், 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. நாளை மறுதினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

