ஓட்டளித்த பின் கடை திறக்க அனுமதி கேட்டு வணிகர்கள் மனு
ஓட்டளித்த பின் கடை திறக்க அனுமதி கேட்டு வணிகர்கள் மனு
ADDED : ஏப் 17, 2024 10:02 PM
சென்னை:'சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள், குடும்பத்தோடு இணைந்த வணிக நிறுவனங்கள், ஓட்டளித்த பின் அன்றைய தினம் கடையை திறக்க அனுமதிக்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.
ஓட்டு விற்பனைக்கு அல்ல
அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலர் கோவிந்தராஜுலு மற்றும் நிர்வாகிகள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ள மனு:
தமிழகத்தில் நாளை தேர்தல் முடிந்த பின், ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்ட வழிகாட்டுதலின்படி, பணியாளர்கள் ஓட்டளிக்க ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதை, வணிக நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. கடைகளுக்கு விடுப்பு அளித்து, ஓட்டளிப்பது எங்கள் உரிமை. மேலும், வணிகர்களுடைய ஓட்டு விற்பனைக்கு அல்ல.
அதேநேரம் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள், குடும்பத்தோடு இணைந்த வணிக நிறுவனங்கள் ஓட்டளித்த பின், அன்றைய தினம் கடையை திறந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.
நெருக்கடி
தேர்தல் முடிந்த பின், ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தால், வணிகர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாவர்.
தொடர்ந்து இரண்டு மாத கால நெருக்கடியை, வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அளிப்பது, இயற்கை நீதிக்கு முரணானது.
எனவே, தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும், நடத்தை விதிகளை தளர்த்தி, மாநில எல்லையில் மட்டும் அமலாக்கம் செய்வது நியாயமானதாக இருக்கும்.
இதை, தலைமை தேர்தல் கமிஷனரிடம் எடுத்துக் கூறி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

