சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவ ஏற்பாட்டை எதிர்த்து மனு
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவ ஏற்பாட்டை எதிர்த்து மனு
ADDED : ஏப் 27, 2024 12:40 AM
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில், விநாயகர், விஷ்ணு, முருகனுக்கு சன்னிதிகள் உள்ளன. விஷ்ணு சிலைக்கு, 1,000 ஆண்டுகளுக்கு முன் வரை, பொது தீட்சிதர்கள் தான் பூஜை செய்து வந்தனர். 1,539ம் ஆண்டில் கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி கட்டப்பட்டது.
தமிழகத்தில் நுாற்றுக்கணக்கில் சிவன் கோவில்கள் உள்ளன. அங்கு, விஷ்ணு சன்னிதியும் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், பிரமோற்சவம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள், சடங்குகள் நடக்கும். கோவிந்தராஜ சன்னிதிக்கு என, கோவிலில் சிறிது இடம் உள்ளது. 90 சதவீத பக்தர்கள், நடராஜரைதரிசிப்பதற்காகவே வருவர்.
உத்தரவுக்கு தடை
கோவிந்தராஜ பெருமாளுக்கான விழாக்கள், சடங்குகள் குறித்த பட்டியல், 1920ல் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது. கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு பிரமோற்சவம் நடத்தக்கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 18ல், அறநிலையத் துறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவில், 'கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், மே 20 முதல் 29 வரை பிரமோற்சவம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மார்ச் 13ல் நடக்க உள்ளது.
'அதில், நிர்வாக அறங்காவலர்கள், பொது தீட்சிதர்கள் செயலர் உள்ளிட்டோர் ஆஜராகவும், தவறினால் ஆட்சேபனை இல்லை என்று கருதி, தகுதி அடிப்படையில் பிரமோற்சவம் நடத்துவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
இணை ஆணையரின் இந்த உத்தரவு, கோவில் சடங்குகள், வழிபாட்டு முறையில் குறுக்கிடுவது போலாகும். எனவே, இதை ரத்து செய்ய வேண்டும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இல்லாத ஒரு விழாவை கொண்டாட உத்தரவிடுவதற்கு, இணை ஆணையருக்கு அதிகாரம் இல்லை.
எனவே, இணை ஆணையரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தள்ளுபடி
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, “நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மே மாதம் பிரம்மோற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 1983ல் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது,” என்றார்.
இதையடுத்து, கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களை, வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 29க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

