ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகளுக்கு மீண்டும் போலீஸ் காவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடிகளுக்கு மீண்டும் போலீஸ் காவல்
ADDED : ஜூலை 23, 2024 05:41 AM

சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடிகள் மூவரை, மீண்டும் மூன்று நாட்களும்; வழக்கறிஞர் ஒருவரை ஐந்து நாட்களும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என, 16 பேர் கைதாகி, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவுடி பொன்னை பாலு உட்பட 11 பேர், ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.
அப்போது, போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய ரவுடி திருவேங்கடம், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றவர்கள் பூந்தமல்லி கிளை சிறையில் உள்ளனர்.
அதைத் தொடர்ந்து, சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரனை,31, போலீசார் கைது செய்து, அதே சிறையில் அடைத்தனர். விசாரணையில், அவர் தான் கூலிப்படையினரை ஒருங்கிணைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வரும் செம்பியம் போலீசார், ரவுடிகள் பொன்னை பாலு, 39, திருநின்றவூரை சேர்ந்த ராமு,38, வழக்கறிஞர்கள் அருள், 33, ஹரிஹரன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனு, நீதிபதி ஜெகதீசன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பொன்னை பாலு உட்பட நால்வரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோர், 'போலீசார் ஏற்கனவே எங்களை காவலில் எடுத்து விசாரித்து விட்டனர். அப்போது, எங்களுடன் விசாரிக்கப்பட்ட திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார். எங்களுக்கும் அதே நிலை ஏற்படுமோ என்று, பயமாக உள்ளது. எங்களை போலீஸ் காவல் விசாரணைக்கு அனுப்ப வேண்டாம்' என, முறையிட்டனர்.
இதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோரை மூன்று நாட்களும்; ஹரிஹரனை ஐந்து நாட்களும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.