சமூகவலைதளத்தில் பரப்பப்படும் வீடியோவால் சஸ்பெண்ட்; கடமையை செய்வது தவறா என போலீசார் புலம்பல்
சமூகவலைதளத்தில் பரப்பப்படும் வீடியோவால் சஸ்பெண்ட்; கடமையை செய்வது தவறா என போலீசார் புலம்பல்
ADDED : பிப் 22, 2025 03:40 AM

மதுரை : தமிழகத்தில் போலீசாரை குறிவைத்து சமூகவலை தளத்தில் ஆளாளுக்கு வீடியோ 'அப்டேட்' செய்வது அதிகரித்துள்ளது. அது 'வைரல்' ஆகிறது என்பதற்காக சம்பந்தப்பட்ட போலீசாரை இடமாற்றம், சஸ்பெண்ட் செய்கின்றனர். கடமை தவறாமல் பணி செய்தால் இதுதான் தண்டனையா என போலீசார் புலம்புகின்றனர்.
சென்னை மெரீனா பீச்சில் இரவு 7:30 மணியளவில் ஒரு பெண், ஒரு ஆண் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் விசாரித்தார். உரிய பதில் அளிக்காததால் 'நீங்கள் கணவன், மனைவியா' எனக்கேட்க, 'ஆணும், பெண்ணும் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் தம்பதியாகதான் இருக்க வேண்டுமா' என அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை வீடியோவும் எடுத்தார்.
போலீசார் அதிர்ச்சி
அதை சமூகவலைதளத்தில் அவர் 'அப்டேட்' செய்ய 'வைரலானது'. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் இடமாற்றப்பட்டார்.
உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் போதை இளைஞரிடம் ஏட்டு விசாரித்தபோது தன் தலையை சுவரில் மோதச்செய்து காயப்படுத்திக்கொள்ள முயற்சித்தார். அந்த இளைஞனை கையால் அடித்து உட்கார ஏட்டு கூறினார்.
இதை ஸ்டேஷனில் இளைஞனை ஏட்டு தாக்கியதாக 'எடிட்' செய்து சிலர் 'அப்டேட்' செய்தனர். இதுதொடர்பாக ஏட்டுவிடம் விசாரணை நடந்தது.
'போலீசார் கடமையை செய்தால்கூட தவறு என துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருவதால் போலீஸ் சீருடை மீதான மதிப்பும், பயமும் குறைந்து விடும் அபாயம் உள்ளது' என்கின்றனர் சில போலீஸ் அதிகாரிகள்.
மெரீனா பீச் விவகாரத்தில் அந்த போலீஸ்காரரை இடமாற்றியதற்கு 'இருவரும் கணவன், மனைவியா' என கேட்டதுதான் காரணம் என போலீஸ் இணைகமிஷனர் விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். இது ஒட்டுமொத்த போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குற்றங்கள் அதிகரிக்கும்
போலீசார் கூறியதாவது: மெரீனா பீச்சில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அந்த போலீஸ்காரர்தானே பொறுப்பு. அவர் தன் கடமையைதான் செய்துள்ளார்.
கேள்வி கேட்டது தவறு என ஒவ்வொருவரும் புகார் கூற ஆரம்பித்தால் எந்த விசாரணையிலும் சரியான பதில் கிடைக்காது. போலீசார் பொது இடத்தில் மரியாதை குறைவாக நடந்து கொண்டார்களா, அத்துமீறினார்களா என்று தான் பார்க்க வேண்டும். வீடியோ அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பது ஏற்புடையது அல்ல.
இது தொடர்ந்தால் போலீசார் மீது ஆளாளுக்கு புகார் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். பயம் போய் விடும். குற்றங்கள் அதிகரிக்கும். இதுகுறித்து டி.ஜி.பி., சங்கர்ஜிவால் உரிய வழிமுறைகளை உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றனர்.