கிருஷ்ணகிரியில் பெண் பலாத்காரம் காமுகன் மீது போலீஸ் துப்பாக்கி சூடு ஒருவனுக்கு கால் முறிவு; இருவர் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரியில் பெண் பலாத்காரம் காமுகன் மீது போலீஸ் துப்பாக்கி சூடு ஒருவனுக்கு கால் முறிவு; இருவர் சிறையில் அடைப்பு
ADDED : பிப் 22, 2025 01:07 AM

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த போதை வாலிபர்கள், அவரிடமிருந்த நகை, பணத்தை பறித்த கொடூரமும் நிகழ்ந்துள்ளது.
இந்த வழக்கில், இரு வாலிபர்களை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் இருவரில் ஒருவரை நேற்று சுட்டுப் பிடித்தனர். மற்றொருவரை கால் முறிந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.
சுற்றிவளைப்பு
---கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கிருஷ்ணகிரி மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19ம் தேதி மதியம் 3:00 மணியளவில், திருப்பத்துாரைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவரும், 35 வயது பெண் ஒருவரும் வந்தனர்.
இருவரும் மலை உச்சிக்கு சென்ற போது, அங்கு நான்கு வாலிபர்கள் மது போதையில் அமர்ந்திருந்தனர். அவர்கள், மலைக்கு வந்த பெண்ணையும், உடன் வந்த நபரையும் கத்தி முனையில் சுற்றி வளைத்தனர். பின், அந்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கம்மல் உள்ளிட்டவற்றை பறித்தனர்.
அத்துடன், நான்கு இளைஞர்களில் இருவர், பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மீதமுள்ள இருவரில், ஒருவர் அதை வீடியோ எடுத்துள்ளார். மற்றொருவர், பெண்ணுடன் வந்தவரை கத்தி முனையில் நிறுத்தி உள்ளார்.
பலாத்காரம் செய்தும் வெறி அடங்காத போதை வாலிபர்கள், பெண்ணிடம் இருந்த 7,000 ரூபாய், அவரது வங்கி கணக்கில் இருந்து ஜிபே வாயிலாக 7,000 ரூபாயை பறித்துள்ளனர்.
'இது குறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவோம். இதுவும் சரி; ஜெயிலும் சரி; எங்களுக்கு புதிதல்ல' என்று மிரட்டி அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து, மலையில் இருந்து கீழே இறங்கி, அழுதபடி வந்த பெண்ணிடம், மலையடிவாரத்தில் இருந்த மக்கள் விசாரித்து உள்ளனர்.
அப்போது, அழுதபடியே தனக்கு நேர்ந்த கொடுமையை கூறிய அப்பெண், போலீசில் புகார் எதுவும் அளிக்காமல் சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
பல வழக்குகள்
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அப்பகுதியில் விசாரித்தனர். அருகிலுள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், பெண்ணிடம் அத்துமீறல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது கிருஷ்ணகிரி, பழையபேட்டையைச் சேர்ந்த சுரேஷ், 22, நாராயணன், 21, கலையரசன், 21, அபிஷேக், 20, என்பது தெரிய வந்தது.
அவர்கள் மீது கிருஷ்ணகிரி டவுன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மலை உச்சியில் உள்ள மொபைல் டவர் வாயிலாக, சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் போன் எண்ணை வைத்து, அப்பெண் திருப்பத்துாரைச் சேர்ந்தவர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், அவரது வங்கி கணக்கிலிருந்து, ஜிபேவில் 7,000 ரூபாயை சுரேஷ் பறித்ததும் ஆதாரபூர்வமாக தெரிந்தது. நடந்த விபரங்கள் அனைத்தையும் தெரிந்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போனில் விசாரித்தனர்.
கிருஷ்ணகிரி போலீசார் திருப்பத்துார் சென்று, அப்பெண்ணிடம் புகாரை பெற்று வழக்கும் பதிந்தனர்.
தலைமறைவு
போலீசார் தங்களை பற்றி விசாரிப்பதை அறிந்த போதை வாலிபர்கள் நால்வரும், இரு குழுக்களாக பிரிந்து தலைமறைவாகினர். நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி, பழையபேட்டை மலைப்பகுதியில் தலைமறைவாக இருந்த கலையரசன் மற்றும் அபிஷேக்கை, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவர், கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் பதுங்கியிருப்பது தெரிந்தது.
கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, எஸ்.ஐ., பிரபாகர், போலீசார் குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் நேற்று காலை, 11:00 மணிக்கு அவர்களை பிடிக்கச் சென்றனர்.
போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசார் குமார், விஜயகுமாரை தாக்கி விட்டு தப்ப முயன்றனர்.
அப்போது, போலீசார் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்தனர்.
அதன் பிறகும், சுரேஷ், நாராயணன் தப்பி ஓடினர். சுரேஷின் வலது கால் முட்டியில் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தப்பி ஓடிய நாராயணன், கல் தடுக்கி கீழே விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
காயமடைந்த போலீஸ்காரர்கள் குமார், விஜயகுமார், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கலையரசன், அபிஷேக் ஆகியோர் தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தப்ப முயற்சி
கிருஷ்ணகிரி எஸ்.பி., தங்கதுரை, ஏ.டி.எஸ்.பி., சங்கர், டி.எஸ்.பி., முரளி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
எஸ்.பி., தங்கதுரை கூறுகையில், ''குற்றவாளிகள் தாங்கள் வைத்திருந்த கத்தியால், இரு போலீசாரை தாக்கி தப்ப முயன்றனர். போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளில் சுரேஷ் என்பவரை சுட்டுப் பிடித்தனர். நாராயணன் தப்ப முயன்ற போது, தவறி விழுந்ததில் கால் முறிந்தது,'' என்றார்.