ADDED : ஏப் 18, 2024 09:33 PM
சென்னை:தமிழகத்தில், வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் ஒரு நாள் முழுதும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது. தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, கோடை வெயிலால் தற்போது, 40 கோடி யூனிட்களை தாண்டியுள்ளது.
இம்மாதம், 5ம் தேதி இதுவரை இல்லாத அளவாக, 44.11 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, நேற்று முன்தினம் வரை உச்ச அளவாக இருந்தது.
சுட்டெரிக்கும் வெயிலால், வீடுகளில் நாள் முழுதும், 'ஏசி' சாதனத்தின் பயன்பாடு உள்ளது. இதனால், 17ம் தேதி மின் நுகர்வு எப்போதும் இல்லாத வகையில், 44.27 கோடி யூனிட்களாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதை பூர்த்தி செய்ததில், நீர் மின்சாரத்தின் பங்கு 56 லட்சம் யூனிட்கள்; அனல் 8.17 கோடி யூனிட்; எரிவாயு 48 லட்சம் யூனிட்; சூரியசக்தி 3.94 கோடி யூனிட்; காற்றாலை 76 லட்சம் யூனிட்; மத்திய மின்சாரம் 11.56 கோடி யூனிட் என்றளவில் இருந்தது.
மீதி மின்சாரம், மின் கொள்முதல் வாயிலாகவும், மின்சார பரிமாற்ற முறையிலும் பெறப்பட்டது.

