மின் தேவை மீண்டும் உச்சம் 41 நாளில் 1,400 மெகா வாட் உயர்வு
மின் தேவை மீண்டும் உச்சம் 41 நாளில் 1,400 மெகா வாட் உயர்வு
ADDED : மே 04, 2024 12:15 AM
சென்னை:தமிழகத்தில் தற்போது வீசும் வெப்ப அலையால், 'ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவை அதிகரித்து வருகிறது. ஏப்., 30ம் தேதி மாலை இதுவரை இல்லாத அளவாக, 20,701 மெகா வாட்டாக அதிகரித்தது.
கடும் வறட்சியால் விவசாயிகள் பாசனத்திற்கு நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், மின் தேவை நேற்று முன்தினம், எப்போதும் இல்லாத வகையில், 20,830 மெகா வாட்டாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
புதிய மின் இணைப்பு, மின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஆண்டுதோறும் மின் தேவை அதிகரிப்பது வழக்கம். அதன்படி, ஆண்டுக்கு சராசரியாக, 750 மெகா வாட் வரை கூடுதலாக அதிகரிக்கும். கொரோனா ஊரடங்கிற்கு பின் தொழில் நிறுவனங்கள் அனைத்தும், 2023ல் முழுவீச்சில் செயல்பட்டன. அந்த ஆண்டில், மின் தேவை முந்தைய ஆண்டை விட அதிகரித்தது.
இந்தாண்டு லோக்சபா தேர்தல், மிக கடுமையான வெயிலால் வீசும் வெப்ப அலை உள்ளிட்ட காரணங்களால், மின் தேவை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் உச்ச அளவாக இருந்த, 19,387 மெகா வாட் மின் தேவையை விட, இந்தாண்டு மார்ச் 22ம் தேதி, 19,409 மெகா வாட்டாக அதிகரித்தது.
இது தொடர்ந்து அதிகரித்து, நேற்று முன்தினம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எனவே, கடந்த ஆண்டில் ஏற்பட்ட உச்ச அளவுடன் ஒப்பிடும்போது, கடந்த 41 நாள்களில் மட்டும் மின் தேவை 1,443 மெகா வாட் அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஆண்டு வாரியாக
அதிகபட்ச மின் தேவை
-----------------------
ஆண்டு - மின் தேவை மெகா வாட்டில்
2017 ஏப்., 19 - 15,240
2018 மார்ச் 11 - 15,847
2019 ஏப்., 3 - 16,151
2020 மார்ச் 26 - 16,481
2021 மார்ச் 29 - 17,196
2022 ஏப்., 29 - 17,563
2023 ஏப்., 20 - 19,387
2024 மே 2 - 20,830