ADDED : ஜூன் 29, 2024 10:05 PM
சென்னை:மின்னகத்தில் அளிக்கப்படும் மின் தடை புகார் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக உதவி பொறியாளரின் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதி துவக்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணா சாலை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் உள்ளது. இங்கு, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில் மின் தடை, மீட்டர் பழுது என, மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம்.
ஒரு, 'ஷிப்டு'க்கு, 60 பேர் என, மூன்று ஷிப்டில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், 24 மணி நேரமும் புகார் பெறுகின்றனர். தற்போது, மின்னகத்தில் அளிக்கப்படும் புகார், அங்குள்ள கணினியில் பதிவு செய்யப்படுகிறது.
பின், மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அங்கிருந்து, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக உதவி பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
இதனால், உதவி பொறியாளருக்கு தகவல் செல்வதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. எனவே, புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மின்னகத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட உடனே உதவி பொறியாளரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் வசதி துவங்கியுள்ளது.
நுகர்வோர் புகார் அளிக்கும் போது, மின் இணைப்பு எண், பதிவு செய்த மொபைல் போன் எண்ணை, மின்னகத்தில் தெரிவிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், அந்த இணைப்புக்கு உரிய அலுவலக பொறியாளரின் மொபைல் போனுக்கு புகார் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். அவர் நடவடிக்கை எடுத்து, அந்த விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
உதவி பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'மின்னகத்தில் அளிக்கப்படும் புகார் உடனே கிடைப்பதால் சம்பந்தப்பட்ட நுகர்வோரை அணுகி, பிரச்னைக்கு தீர்வு காண உதவியாக உள்ளது' என்றார்.

