ADDED : மே 06, 2024 01:13 AM
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சித்திரை பிரதோஷத்தை முன்னிட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை மலையடிவாரத்தில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் குவிந்திருந்தனர். வெயில் தாக்கத்தால் தங்களை உடனடியாக மலையேற அனுமதிக்குமாறு வனத்துறையினரிடம் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து காலை 6:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சில மாதங்களாக மழை பெய்யாத நிலையிலும் ஓடைகளில் நீர்வரத்து இல்லாமல் செடி, கொடிகள் வறண்டு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகம் காணப்பட்ட நிலையிலும் அதனைப்பொருட்படுத்தாமல் பக்தர்கள் மலையறினர்.
நீண்ட வரிசையில் காத்திருப்பு
சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி சன்னதியில் பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.