வன்கொடுமை தடுப்பு : தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகளுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்
வன்கொடுமை தடுப்பு : தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகளுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்
ADDED : ஜூலை 10, 2024 11:19 PM
சென்னை:பல்லாவரம் தி.மு.க.,- எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன், மருமகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து கொண்டது. நீதிமன்ற உத்தரவுபடி, இருவரும் நேரில் ஆஜராகி, குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டனர்.
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., இ.கருணாநிதி. இவரது மகன் ஆன்டோ மதிவாணன், 35. இவரது மனைவி மார்லினா ஆன், 32. இருவரும் திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இருவரும் தன்னை துன்புறுத்தியதாக, வீட்டு பணிப்பெண் அளித்த புகாரின்படி, திருவான்மியூர் போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆந்திராவில் தலைமறைவாக இருந்த இருவரையும், கடந்த ஜன., 25ல் போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்த இருவரும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், ஆன்டோ மதிவாணன், அவரின் மனைவி மார்லினா ஆன் ஆகியோருக்கு எதிராக, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான வழக்கின் கோப்புகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் 'சம்மன்' அனுப்பியது. அதன்படி, இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும், 22ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார்.

