வீண் பழி சுமத்துகிறார் பிரதமர் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
வீண் பழி சுமத்துகிறார் பிரதமர் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : மே 19, 2024 01:50 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: பிரதமர் மோடி தோல்வி பயத்தில், பதவியின் கண்ணியத்தை மறந்து, பொய் பரப்புரை, பொழுதொரு வெறுப்பு விதை என, பேசி வருகிறார்.
அவரது பொறுப்பற்ற பேச்சுக்களையும், அதை தடுக்க வேண்டிய தேர்தல் கமிஷன் அமைதியையும், நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும், வேதனையோடும் பார்த்து வருகின்றனர்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலின, பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற, இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என, தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகிறோம்.
இந்த குரல் காங்கிரஸ் கட்சியாலும், இண்டியா கூட்டணி கட்சிகளாலும், அகில இந்திய அளவில் எதிரொலிக்கத் துவங்கி இருக்கிறது. உத்தர பிரதேச மக்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. இதுகுறித்து பிரதமர் எதுவும் பேசவில்லை. ஆனால், வெறுப்பு பரப்புரையை மட்டும் முந்திக் கொண்டு செய்கிறார்.
மத வெறுப்பு பரப்புரை கை கொடுக்காததால், மாநிலங்களுக்கு இடையே மோதலை துாண்டும் மலிவான உத்தியை, கையில் எடுத்திருக்கிறார். உத்தர பிரதேச மக்களை, தமிழகம் உள்ளிட்ட தென் மாநில தலைவர்கள் அவதுாறாகப் பேசுவதாக, தன் கற்பனைக் கதைகளை, பொய் மூட்டைகளை, கட்டவிழ்க்கத் துவங்கி உள்ளார்.
உண்மையில் வெறுப்பு பரப்புரை செய்யவும், சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கவும், மணீஷ் கஷ்யப் போன்ற யு டியூபர்களை வைத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று உருவாக்கப்பட்ட போலி செய்திகளை ஆதரிப்பதும், ஊக்குவிப்பதும் பா.ஜ., தான்.
பயனற்றுப் போன வெறுப்பு பரப்புரைகளால், விரக்தி அடைந்துள்ள மோடி, சொல்லிக் கொள்ள 10 ஆண்டு கால சாதனைகள் எதுவும் இல்லாததால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை, கொச்சைப்படுத்த துணிந்துள்ளார்.
அவர் எப்போதும் ஏழை மக்களுக்கு எதிரானவர் என்பதை, வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.
பெண்களுக்கு தினமும் நன்மை தரும் விடியல் பயண திட்டத்தை, பகிரங்கமாக எதிர்க்க துணிந்திருக்கிறார். பஸ்களில் இலவச பயணத்தால், மெட்ரோ ரயில்களில் கூட்டம் இல்லை என, புதுப்புரளி கிளப்பி இருக்கிறார். பிரதமர் பேசுவதை கவனித்தால், உண்மை கிலோ என்ன விலை என்று கேட்பார் என தோன்றுகிறது.
கடந்த 2019ல், 3.28 கோடி பயணங்கள் என்றிருந்த, சென்னை மெட்ரோ பயணங்கள், 2023ல் 9.11 கோடியாக உயர்ந்துள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்கு, ஒப்புக்கொண்டபடி நிதி தராமல், அந்த திட்டத்தையே முடக்கியவர் மோடி.
இந்த உண்மைகளை மறைத்து, இலவச பஸ் பயண திட்டத்தின் மீது வீண் பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலது சாரி சிந்தனைகள் உடைய, ஆர்.எஸ்.எஸ்., பின்புலத்தில் இருந்து வந்தவர் என்பதால், பெண்களின் முன்னேற்றத்தை கண்டு அஞ்சுகிறார்.
பா.ஜ.,வின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது. பொய்மை உடைபட்டு வெறுப்பு அகலும்; இண்டியா வெல்லும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

