ADDED : ஜூன் 09, 2024 02:52 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், தலைமையாசிரியராக வேலை பார்த்தவர் ஆனந்தராஜ், 57. இவர், 2022ல் அந்த பகுதியில் உள்ள 10 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. துாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆனந்தராஜை கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கு துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம் சாட்டப்பட்ட தலைமையாசிரியர் ஆனந்தராஜுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பு வழங்கினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண தொகையில் இருந்து, 2 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆனந்தராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

