உற்பத்திசார் ஊக்கத்தொகை திட்டம்; சிறு, குறு நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
உற்பத்திசார் ஊக்கத்தொகை திட்டம்; சிறு, குறு நிறுவனங்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 22, 2024 12:52 AM

திருப்பூர் : 'மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஏற்றுமதியை ஊக்குவிக்கும் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு தொகை திட்டம் அறிவிக்கப்பட்டால், திருப்பூரின் ஆடை உற்பத்தி தொழில் இரு மடங்கு வளர்ச்சி பெறும்' என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்திசார் ஊக்கத் தொகை திட்டத்தை, 2020 ஏப்ரலில் மத்திய அரசு அறிவித்தது.
இத்திட்டத்தில் ஜவுளி உற்பத்தி, சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி தயாரிப்பு உள்ளிட்ட, 14 துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கென, 1.97 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது.
இருப்பினும், திட்டத்தில் இணைவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், ஒதுக்கப்பட்ட தொகையில், 1.5 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. திட்டம் குறித்து, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களின் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம், தற்போது செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
அதிலும், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 கோடி ரூபாய் வர்த்தகம்; 300 கோடி ரூபாய் முதலீட்டில், 600 கோடி ரூபாய் வர்த்தகம் என, இரு பிரிவுகளின் கீழ் மட்டுமே உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நாடு முழுக்க, 64 விண்ணப்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வழங்கப்பட்டிருக்கின்றன. இதில், திருப்பூரில், ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே விண்ணப்பம் வழங்கி, திட்டத்தில் இணைந்தும் உள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிகமுள்ள நிலையில், '15, 25, 50 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என, தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார். நாளை மத்திய பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

