ADDED : செப் 10, 2024 05:54 AM

வேலுார் : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவகுமார், 30, ஆயுள் தண்டனை கைதியாக வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரை வேலுார் சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமியின் வீட்டு வேலைக்கு, சிறைக்காவலர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது, வீட்டிலிருந்த, 4.50 லட்சம் ரூபாய், வெள்ளி பொருட்களை திருடியதாக, சிவகுமாரை சிறை வார்டன்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், சிவகுமார் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரின் தாய், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக, வேலுார் நீதிபதி விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யவும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணைக்கும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, சிவகுமாரிடம் விசாரணை நடந்த நிலையில், சேலம் மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அதே சமயம், சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி உள்ளிட்ட, 14 பேர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் 7ம் தேதி வழக்குப்பதிந்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
இந்த விவகாரங்களால், சிறை அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு, சிறை கைதிகளை பயன்படுத்த தடை விதித்து, உயர் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.