மக்கள் சேவகர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு
மக்கள் சேவகர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 07, 2024 01:07 AM
மதுரை:மக்களை பாதுகாப்பதாகக்கூறி சேவை செய்ய வந்தவர்களுக்கு எதற்கு பாதுகாப்பு, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும். உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி துவாக்குடி முருகேசன் தாக்கல் செய்த மனு:
நான் அ.இ.,மக்கள் மறுமலர்ச்சிக் கழக தலைவர். எனக்கு துப்பாக்கி உரிமம் அல்லது போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கலெக்டர் துப்பாக்கி உரிமம் வழங்கினார்.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால் துவாக்குடி போலீசில் எனது துப்பாக்கியை ஒப்படைத்தேன். எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது.
எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி., திருச்சி கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.புகழேந்தி: மக்களை பாதுகாப்பதாகக்கூறி சேவை செய்ய வந்துள்ளீர்கள். உங்களுக்கு எதற்கு பாதுகாப்பு, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும். உங்களைநீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.

