ADDED : ஆக 08, 2024 01:17 AM
சென்னை:தமிழகம், புதுச்சேரியில் வரும் 11ம் தேதி வரை, பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், வரும் 11 வரை மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக் காற்று மற்றும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
இதைத் தொடர்ந்து, வரும் 13 வரை ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில், வரும் 11 வரை அதிகபட்சமாக, மணிக்கு 45 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.