கால்நடைக்கு குடிநீர் தொட்டிகள் அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
கால்நடைக்கு குடிநீர் தொட்டிகள் அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
ADDED : மே 03, 2024 01:30 AM
சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டம் கூடலுார், மசினக்குடி உள்ளிட்ட பகுதிகளில், தண்ணீர், உணவு இல்லாததால், 50க்கும் மேற்பட்ட ஆடுகளும், மாடுகளும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் இல்லாத வகையில், கோடை வெப்பம் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.
தமிழகத்தின் பல பகுதிகளில், கோடை வெப்பத்தால், கால்நடைகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வருகின்றன. இதைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், தமிழக அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளது.
வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு இணையாக, கவனிக்க ஆள் இல்லாத சூழலில் வளரும் கால்நடைகளும், லட்சக்கணக்கான தெருநாய்களும் உள்ளன. கோடை வெப்பம் காரணமாக, அவற்றுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அதைப் போக்கும் வகையில், தெருக்களில் நடமாடும் கால்நடைகள், தெருநாய்கள் போன்றவை குடித்து இளைப்பாறுவதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளைத் திறக்க அரசு உத்தரவிட வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.