ராமேஸ்வரம் மீனவர் படகு கடலில் மூழ்கி இருவர் மாயம்; மேலும் இருவர் கச்சத்தீவில் தஞ்சம்
ராமேஸ்வரம் மீனவர் படகு கடலில் மூழ்கி இருவர் மாயம்; மேலும் இருவர் கச்சத்தீவில் தஞ்சம்
ADDED : ஆக 27, 2024 11:49 PM

ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் படகு ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கியது. அதில் இருந்த இரண்டு மீனவர்கள் நீந்தி கச்சத்தீவில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இரண்டு பேர் கடலில் மூழ்கி மாயமாயினர்.
ஆக., 26ல் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அன்றிரவு சூறாவளி வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததால் மீனவர்கள் சிரமப்பட்டனர். இதில் டெல்வின் ராஜ் என்பவரது படகு ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கியது.
அப்போது படகில் இருந்த மீனவர்கள் டெல்வின் ராஜ் 45, சுரேஷ் 49, எமரிட் 49, வெள்ளைச்சாமி 55, ஆகியோர் கடலில் குதித்து நீந்தினர். இதில் டெல்வின்ராஜ், சுரேஷ் இருவரும் உயிருக்கு போராடி ஒரு வழியாக நீந்தி கச்சத்தீவில் தஞ்சமடைந்தனர்.
இவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் மீட்டு விசாரித்தனர்.
மற்ற இரண்டு மீனவர்களான எமரிட், வெள்ளைச்சாமி கடலில் மூழ்கி காணாமல் போனதாக கச்சதீவில் உள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து படகில் அப்பகுதியில் பல மணி நேரம் தேடியும் இரண்டு மீனவர்களும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் மீனவர்கள் குடும்பத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.