ADDED : ஆக 15, 2024 12:30 AM
சென்னை:தமிழகத்தில் உள்ள 'ராம்சார்' தளங்களின் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள், ராம்சார் தளங்களாக அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், நாடு முழுதும் உள்ள ராம்சார் தளங்கள் எண்ணிக்கை, 82ல் இருந்து, 85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ராம்சார் தளங்கள் எண்ணிக்கை, 16ல் இருந்து 18 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்; விழுப்புரம் மாவட்டம், கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள கழுவேலி பறவைகள் காப்பகம் ஆகியவை சேர்க்கப்பட்டுஉள்ளன.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம், நஞ்சராயன் பறவை கள் காப்பகம்; விழுப்புரம் மாவட்டம், கழுவேலி பறவைகள் காப்பகம் ஆகியவற்றுடன் சேர்த்து, தமிழகத்தில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துஉள்ளது.
இத்தொடர் சாதனை, தமிழக வனத்துறையின் அர்ப்பணிப்பு மிகுந்த முயற்சிகளையும், நம் ஆட்சி நிர்வாகம் சுற்றுச்சூழலை காப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.