மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் கலெக்டர் முன்னிலையில் அடக்கம்
மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் கலெக்டர் முன்னிலையில் அடக்கம்
ADDED : மே 31, 2024 02:12 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், ஐகோர்ட் உத்தரவுபடி, மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தொழிலாளி உடல், கலெக்டர் முன்னிலையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்தவர் ராஜா, 45; திருப்பச்சாவடிமேடு ஓட்டலில் பணிபுரிந்தார். கடந்த ஏப்., 10ம் தேதி சட்டவிரோதமாக மது விற்றதாக, விழுப்புரம் தாலுகா போலீசார் ராஜாவை விசாரணைக்கு அழைத்துச் சென்று, பின்னர் விடுவித்தனர்.
வீட்டிற்கு வந்த ராஜாவின் உடல்நிலை பாதித்ததால், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். போலீசார் தாக்கியதால்தான் இறந்ததாக, ராஜாவின் மனைவி அஞ்சு, போலீசில் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஐகோர்ட் உத்தரவின்பேரில், விழுப்புரம் கே.கே.ரோடு சுடுகாட்டில் புதைகப்பட்டிருந்த ராஜாவின் உடலை கடந்த 22ம் தேதி, கலெக்டர் முன்னிலையில் தோண்டி எடுத்து மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ராஜாவின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
உடலை ஒப்படைக்க உத்தரவிட கோரி, ராஜாவின் மனைவி அஞ்சு, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த ஐகோர்ட், ராஜாவின் உடலை, அவரது மனைவி அஞ்சுவிடம் ஒப்படைத்து, அடக்கம் செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று காலை 10:50 மணிக்கு, அரசு மருத்துவமனையில் இருந்த ராஜாவின் உடல், அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து ராஜாவின் உடல், விழுப்புரம் கே.கே. ரோடு சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, 11:30 மணிக்கு, கலெக்டர் பழனி, ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் அமீது, தாசில்தார் வசந்தகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.