ADDED : மார் 22, 2024 01:24 AM

தமிழில், பெண்களால் நிர்வகிக்கப்படும் சமையல் சேனல்களில், 'சப்ஸ்கிரைபர்' எண்ணிக்கையின்படி இரண்டாவது இடத்தில் இருக்கும், 'இந்தியன் ரெசிப்பீஸ்' சேனலை தனியொருவராக நிர்வகிக்கும், புதுடில்லியை சேர்ந்த அபிராமி:
பூர்விகம், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை. கணவர் விமானப்படையில் உயரதிகாரியாக குஜராத்தில் வேலை செய்தார். அங்கிருந்த போது எனக்கு சமையல் ஆர்வம் அதிகமானது.
'நீ குக்கிங் சேனல் ஆரம்பித்தால் உனக்கும், மத்தவங்களுக்கும் அது பயனுள்ளதா அமையும்' என கணவர் கூறினார்.
கேமரா முன்னாடி பேசறதா என்று தயங்கி, இதெல்லாம் ஒத்து வராது என்று கூறினேன். ஆனால், 2017ல் சேனலை வம்படியா ஆரம்பித்து கொடுத்தார்.
சேனல் ஆரம்பித்த புதிதில் டெக்னிக்கல் விஷயங் கள் எதுவுமே எனக்கு தெரியாது. போனில் வீடியோ எடுத்து எடிட் செய்வது, பப்ளிஷ் செய்வது என, பெரும்பாலான வேலைகளை கணவர் தான் செய்வார்.
வீடியோவில் முகம் காட்டினால், கிண்டலா பேசுவாங்க என பயந்து, முகத்தை காட்டாமல் சமைப்பதை மட்டும் ஷூட் பண்ணுவோம்.
சேனல் ஏற்ற இறக்கத்தில் இருந்த நேரத்தில், கணவர் அவர் வேலையில் பிசியாகிட்டார். அதனால் ஷூட் பண்றது, எடிட்டிங், அப்லோடு செய்வது என, சேனலுக்கான அனைத்து வேலைகளையும் கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்தேன்.
முகத்தை காட்டி சமையல் பண்ணுங்கன்னு பலரும் கேட்கவே, 2022 முதல் கேமராவில் முகத்தை காட்டி சமைக்க ஆரம்பித்தேன். கொரோனா நேரத்தில் 20 லட்சம் சப்ஸ்கிரைபர்சுக்கும் அதிகமாக இருந்தனர்.
அப்போது தான் ரஷ்ய நாட்டவரால் எங்கள் சேனல் ஹேக் செய்யப்படவே அதிர்ந்துட்டோம். 'யு டியூப்' நிர்வாகத்துக்கு உரிய ஆவணங்களை கொடுத்து, ஒரு வழியாக சேனலை மீட்டோம்.
சைவம், அசைவம் என பல தரப்பட்ட ரெசிப்பிகளுடன் வாரத்துக்கு ஐந்து வீடியோக்களுக்கு குறையாமல் பதிவிடுகிறேன். இப்போது கேமரா முன் பேசுவதில் எந்த தயக்கமும் கிடையாது.
கேமராவை செட் செய்து, நானே ஷூட் பண்ணிடுவேன். தினசரி ஏழு மணி நேரம் என, வாரத்தில் ஆறு நாட்கள் வேலை இருக்கும்.
வித்தியாசமான ரெசிப்பிகள், எளிமையான செய்முறை, சிம்பிளான காஸ்டியூம், மற்றும் என் கொண்டை ஆகியவை தான் என் சேனலுக்கான அடையாளங்கள்.
தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டால் தான், பார்வையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதனால், வெளியூர் மற்றும் விசேஷங்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன்.
'உன்னை மட்டுமே நீ முழுதாக நம்பியிருந்தால் நான் உட்பட யார் உதவியும் உனக்கு தேவைப்படாது' என்று என் கணவர் எதார்த்தத்தை உணர்த்தினார். அதை கடைப்பிடித்ததால் தான், எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை பெற்றிருக்கிறேன்.

