ADDED : மே 20, 2024 12:33 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 900 கன அடியாக குறைக்கப்பட்டது.
வைகை அணையில் இருந்து மே 10 முதல் 14 வரை ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக 915 மில்லியன் கன அடி நீர் திறந்து விடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக மே 16ல் வினாடிக்கு 1500 கன அடியாக திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 900 கன அடியாக குறைக்கப்பட்டது.
வைகை அணை நீர் வளத்துறையினர் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு ஒதுக்கப்பட்ட 376 மில்லியன் கன அடி நீர் வெளியேறியதும் இன்று அணையில் நீர் நிறுத்தப்படும். நாளை (மே 21) முதல் 6 நாட்களுக்கு வைகை பூர்வீக பாசனப்பகுதி 1ல் உள்ள மதுரை மாவட்ட கண்மாய்களில் தேங்கும் விதமாக வைகை அணையில் நீர் திறந்து விடப்படும். நேற்று அணை நீர்மட்டம் 48.82 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி வீதம் வழக்கம்போல் நீர் வெளியேறுகிறது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 60 கன அடியாக இருந்தது என்றனர்.

