ADDED : ஏப் 19, 2024 01:05 AM
சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழக கூடுதல் டி.ஜி.பி., அருணுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி தாக்கல் செய்த மனுவில், 'குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாக, சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அருண் செயல்படுவார். அவரை இடமாற்றம் செய்யக்கோரி மனு அளித்துள்ளேன்.
நியாயமான தேர்தல் நடக்க, என் மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி உத்தரவிட வேண்டும். எனக்கும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரரின் குற்றச்சாட்டுக்களை, டி.ஜி.பி., மறுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அதிகாரிகள் உள்ளதால், அதுகுறித்து எந்த அச்சமும் தேவையில்லை' என்றார்.
இதையடுத்து, கடைசி நேரத்தில் போலீஸ் அதிகாரியை இடமாற்றம்செய்யும்படி உத்தரவிட முடியாது எனக்கூறி, வழக்கு விசாரணையை, முதல் பெஞ்ச் முடித்து வைத்தது.
'தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டியது ஆணையத்தின் கடமை. அதிகாரிகளின் நடவடிக்கைகளை ஆணையம் கண்காணிக்கிறது என்பதால், அவர்கள் தவறு செய்தால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்' என, முதல் பெஞ்ச் தெரிவித்துள்ளது.

