தி.மு.க.,வுக்கு எதிராக பதிவு;சாஸ்திரி மீது சரமாரி தாக்குதல்
தி.மு.க.,வுக்கு எதிராக பதிவு;சாஸ்திரி மீது சரமாரி தாக்குதல்
UPDATED : ஏப் 14, 2024 10:32 PM
ADDED : ஏப் 14, 2024 06:20 PM

தஞ்சாவூர்;தஞ்சாவூர் மாவட்டம், களஞ்சேரியில் உள்ள ஸ்ரீ வேத வித்யா குருகுலத்தை சாஸ்திரிகள் சீதாராமன் நடத்தி வருகிறார்.

இவர் வெளியிட்ட ஆடியோ:பிராமணர்களுக்கு எதிராக ராட்சத கூட்டமான திராவிட கழகம், தி.மு.க., போன்ற அசுர குணம் உள்ளவர்கள் அழிந்து, நமக்கு பாதுகாப்பான ஆட்சிக்கொடுக்க ஆள் கிடைத்து விட்டார்.
முன் எப்படி தபசு இருந்ததோ, தற்போது அது ஓட்டு. எல்லா பிராமணர்களும் தாமரை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு பேசியிருந்தார். இந்த ஆடியோ வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, நேற்று சீதாராமன் நடைபயிற்சி சென்ற போது, அவரை இருவர் தகாத வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து சீதாராமன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'ஆடியோ வெளியிட்டிருந்தேன். அதன் பிரதிபலனை உடனே காட்டுகின்றனர். நான் வாக்கிங் போன போது என்னை அடித்து காட்டுக்குள் இழுத்து சென்று, கெட்ட வார்த்தையில் திட்டி, ஒரு வாரம் வாயை பொத்திக்கொண்டு இரு என அடித்தனர்.
'இந்த முறை நிச்சயமாக தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும். நேர்மையான ஆட்சி வர வேண்டும். அப்போது தான் சாதுக்களும், பொதுமக்களும் அமைதியாக வாழ முடியும்' என பேசி இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சீதாராமனை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு ஹிந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சீதாராமன் தான் தாக்கப்பட்டது தொடர்பாக ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே, பா.ஜ., கூட்டணி தலைவர்கள், மயிலாடுதுறை பா.ம.க., வேட்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சீதாராமனை சந்தித்து பேசினர். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என, ஸ்டாலின் அறிவித்தார்.

