ADDED : மே 30, 2024 01:36 AM
சென்னை:ஊரக பகுதிகளில் பிறப்பு, இறப்பு விபரங்களை, சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. தற்போது, மருத்துவமனை வாயிலாக இந்த விபரங்கள் பெறப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்படுகின்றன.
ஆனாலும், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு விபரங்களின் நகல்கள், பல்வேறு நிலைகளில் மக்களுக்கு தேவைப்படுகின்றன. இதுதொடர்பான நகல்கள் தேவைப்படுவோர், எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெறலாம்.
இதுபோன்ற விபரங்களை பெற, பதிவுத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுகுறித்து, பதிவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு:
என்ன காரணத்துக்காக இதை கேட்கிறார் என்பதை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, யாருடைய பிறப்பு, இறப்பு விபரங்களை கேட்கிறாரோ, அவருக்கு இவர் என்ன உறவு முறை என்பதை தெரிவிக்க வேண்டும்.
மனுவில், இந்த விபரங்கள் முறையாக குறிப்பிடப்பட்டு உள்ளனவா என்பதை, சார் - பதிவாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மனுதாரரின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களையும், சார் - பதிவாளர்கள் சரிபார்க்க வேண்டும்.
ஏற்கனவே இது தொடர்பாக உத்தரவுகள் இருந்தாலும், சார் - பதிவாளர்கள் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்த கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.