ADDED : ஏப் 20, 2024 02:28 AM
சென்னை:''தமிழகத்தில் 11 இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதாக புகார் வந்தது. அவை உடனடியாக சரி செய்யப்பட்டன,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
தமிழகம் முழுதும், 39 லோக்சபா தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த, 68,321 ஓட்டுச்சாவடிகளில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. திருச்சி லோக்சபா தொகுதியில், மிளகுபாறை, கிராப்பட்டி, திருவெறும்பூர் என, மூன்று இடங்களில், சென்னை விருகம்பாக்கம் பகுதியில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
தகவல் அறிந்து, அதிகாரிகள் விரைந்து சென்று, ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது நீக்கினர். இதன் காரணமாக, அந்த ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை, தாமதமாக துவங்கியது. சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட, ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ., காலனியில், 28ம் எண் ஓட்டுச்சாவடியில், காலை 7:20 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில்,''தமிழகத்தில் 11 இடங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், பழுது ஏற்பட்டதாக புகார் வந்தது. அங்கு, அதிகாரிகள் உடனடியாக சென்று, பழுதை சரி செய்தனர். வேறு எந்த பிரச்னையும் எழவில்லை,'' என்றார்.

