அ.தி.மு.க., தயவால் எம்.பி.,யானவர் அன்புமணி பழனிசாமி விமர்சனம்
அ.தி.மு.க., தயவால் எம்.பி.,யானவர் அன்புமணி பழனிசாமி விமர்சனம்
ADDED : ஏப் 17, 2024 12:35 AM

மேச்சேரி:''பா.ம.க.,வின் அன்புமணி, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடுவது உபயோகம் இல்லை என கூறுகிறார். அவர் எம்.பி.,யானது, அ.தி.மு.க., தயவால் என்பதை மறந்து விடக்கூடாது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
தர்மபுரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அசோகனை ஆதரித்து, சேலம் மாவட்டம் மேச்சேரியில் அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
நம் கூட்டணியில், 2019ல், 2வது இடத்தில், பா.ம.க.,வும், 3வது இடத்தில், பா.ஜ.,வும் இருந்தது. பா.ம.க.,வின் அன்புமணி, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடுவது உபயோகம் இல்லை என கூறுகிறார். அவர் எம்.பி.,யானது, அ.தி.மு.க., தயவால் என்பதை மறந்து விடக்கூடாது. அவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, மேச்சேரி பகுதிக்கு ஒரு திட்டத்தை கூட செய்யவில்லை. பா.ம.க., பதவிக்கு கூட்டணி அமைத்துள்ளது. அதனால், தமிழக மக்களுக்கு எந்த உபயோகமும் இல்லை.
நான் முதல்வராக இருந்தபோது, 2020 டிசம்பரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டேன். கணக்கெடுப்பு நடத்த, 2 ஆண்டுகள் ஆகும். தி.மு.க., 2021ல் ஆட்சிக்கு வந்ததால், கணக்கெடுப்பை கிடப்பில் போட்டுவிட்டது.
தொப்பூர் - ஈரோடு சாலையை இரு வழிச்சாலையாக மாற்ற, மத்திய அரசிடம் பேசி, 950 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்தேன். அந்த திட்டத்தையும் ஆட்சிக்கு வந்த, தி.மு.க., செயல்படுத்தாமல் சாலை அகலத்தை குறைத்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.

