ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
ADDED : ஆக 17, 2024 12:13 AM
சென்னை:ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இருவரும் நேற்று விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.
'கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், என்னால் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்க முடியாது; உடல் நிலையும் சரியில்லை.
'நான், 25 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைபட்டு கிடக்கிறேன். எனக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சம்பந்தம் இல்லை' என, போலீசாரிடம் நாகேந்திரன் கூறியுள்ளார்.
ஆனால், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னணியில் நாகேந்திரன் இருப்பதை உறுதி செய்யும் விதமாக, சில ஆவணங்களை போலீசார் காட்டினர். அதை நாகேந்திரன் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். அதேபோல, அஸ்வத்தாமனும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே கைதான வழக்கறிஞர் அருளுக்கும், அவருக்கும் உள்ள தொடர்புகள், சதித் திட்டம் குறித்த ஆவணங்களை போலீசார் காட்டி விசாரித்தனர்.
அதை அவரும் ஏற்க மறுத்து விட்டார். சில கேள்விகளுக்கு, தந்தையும், மகனும் மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மைத்துனர் அசோகன் என்பவர், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் பின்புறமுள்ள, காவலர் குடியிருப்பில் செயல்படும் தனிப்படை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
அவரிடம், ஆம்ஸ்ட்ராங்கிற்கு வந்த கொலை மிரட்டல்கள், எதிரிகள் குறித்து விசாரித்த பின் அனுப்பி வைத்தனர்.