ரூ.1.15 லட்சம் கள்ளநோட்டு ஆட்டு சந்தையில் சிக்கியது
ரூ.1.15 லட்சம் கள்ளநோட்டு ஆட்டு சந்தையில் சிக்கியது
ADDED : மார் 02, 2025 04:16 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கும். தென் மாவட்ட வியாபாரிகள், இங்கு ஆடுவாங்க வருவது வழக்கம். நேற்று அதிகாலை ஆட்டுச்சந்தையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது, சிலர் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாகக் கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், கோட்டைப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, 35, என்ற வியாபாரியிடம், 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பதை எட்டையபுரம் போலீசார் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து, கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். உடன் வந்த சிலர் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், 27 முதல் 51 வயது வரையிலான மேலும் ஐந்து பேரை கைது செய்தனர். ஆறு பேரிடம் இருந்தும், 1 லட்சத்து 15,000 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.