ADDED : மார் 28, 2024 10:01 PM
சென்னை:கூட்டுறவு காய்கறி கடைகளில், குறைந்த விலைக்கு தேங்காய் விற்பனை துவங்கியுள்ளது. அதைதொடர்ந்து, விரைவில் ரேஷன் கடைகளிலும் விற்கப்பட உள்ளது.
தமிழகத்தில் தேங்காய் விளைச்சல் அதிகம் உள்ளது. எனவே, கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளிலும், பண்ணை பசுமை காய்கறி கடைகளிலும் விற்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக, 'டேன்பெட்' எனப்படும், தமிழக கூட்டுறவு விற்பனை இணையம், கோவை மாவட்டம், பொள்ளாச்சி கூட்டுறவு விற்பனை சங்கம் வாயிலாக, அதில் உறுப்பினராக உள்ள விவசாயிகளிடம் இருந்து, 10,000 தேங்காய்கள் கொள்முதல் செய்துள்ளது.
இவை, சென்னையில் உள்ள நான்கு கூட்டுறவு பண்டக சாலைகளுக்கு தலா, 2,500 - 3,000 என்ற எண்ணிக்கையில் அனுப்பப்பட்டு உள்ளன. இந்த தேங்காய்கள், அந்த பண்டக சாலைகள் நடத்தும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில், நேற்று முதல் விற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விவசாயிகளிடம் இருந்து கிலோ தேங்காய், 30 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோவில் ஒன்று அல்லது இரு தேங்காய் நிற்கின்றன. போக்குவரத்து செலவு சேர்த்து, ஒரு தேங்காய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படும்.
இந்த விலை, வெளிச்சந்தையை விட சற்று குறைவாகவே இருக்கும். தேவையை பொறுத்து அதிக தேங்காய் கொள்முதல் செய்யப்படும். விரைவில் ரேஷன் கடைகளிலும் விற்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

