ADDED : ஜூலை 09, 2024 06:39 AM

சென்னை : அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க உள்ளதாக கூறி, வரும் 17ம் தேதி முதல் சசிகலா சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், 'அ.தி.மு.க.,வை ஒன்றிணைத்து, வரும் 2026ல் ஆட்சியை பிடிக்க பாடுபடுவேன்' என, சசிகலா கூறி வருகிறார். அதற்கு பழனிசாமி, 'அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை' எனக் கூறி, இணைப்பு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
இதையடுத்து, 'தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். அப்போது, கட்சியினர் யாரெல்லாம் என்னை சந்திக்கின்றனர் என்ற விபரம் தெரியும்' என, சசிகலா அறிவித்தார்.
இது குறித்து, சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், 'வரும் 17ம் தேதி தென்காசியில் தன் சுற்றுப்பயணத்தை சசிகலா துவங்க உள்ளார். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு அவர் செல்லும்போது அ.தி.மு.க.,வில் மாற்றம் ஏற்படும்' என்றனர்.

