ADDED : மே 26, 2024 01:28 AM

சென்னை:விரைவு ரயிலின் 'ஏசி' பெட்டியில் எலி, கரப்பான் பூச்சிகள் திடீரென ஓடியதால், பயணியர் அலறியடித்து எழுந்தனர். டிக்கெட் பரிசோதகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கேரளா மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, சனிக்கிழமைதோறும் புறப்படும் அஹில்யா நகரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் வழியாக, 3வது நாளில் மத்திய பிரதேச மாநிலம், இந்துார் செல்லும். கொச்சுவேலியில் இருந்து நேற்று காலை 6:35 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில், பகல் 12:15 மணியளவில் திருச்சூர் அருகே வந்த போது, 'எம்4' ஏசி பெட்டியில், நுாற்றுக்கும் மேற்பட்ட கரப்பான் பூச்சிகள் திடீரென வெளியேறி பறக்கத் துவங்கின.
இதையடுத்து, பெண் பயணியர், குழந்தைகள் அலறியடித்து எழுந்து நின்றனர். இதேபோல், எம்1 பெட்டியில் ஏற்கனவே எலிகள் ஓடிக் கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்ததும், உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
டிக்கெட் பரிசோதகர் சத்தியமூர்த்தி தலைமையில் வந்த அலுவலர்களிடம், பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 'இந்த பெட்டியை மாற்றுங்கள் அல்லது வேறு இடத்தை ஒதுக்கி தாருங்கள்; டிக்கெட் தொகையை திருப்பி தாருங்கள்' என பயணியர் முறையிட்டனர். இதையடுத்து, காலியாக இருந்த சில இருக்கைகளுக்கு சிலர் மாற்றப்பட்டனர்.
அந்த ரயில் ஈரோடு வந்ததும், ஆர்.பி.எப்., உதவியுடன் வந்த பணியாளர்கள், கரப்பான் பூச்சிகளை அழிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்தனர்; இறந்து விழுந்த கரப்பான்களை அப்புறப்படுத்தினர்.