ADDED : ஜூன் 23, 2024 03:54 AM

சென்னை : தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட, 62 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சிவசங்கர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுதும் 1,535 ஆம்னி பஸ்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. வெளிமாநில பதிவெண் கொண்ட 905 ஆம்னி பஸ்களில் 112 பஸ்கள் மட்டுமே, தமிழகத்தில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்னும் 793 ஆம்னி பஸ்கள், பல கட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்துக்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை. இத்தகைய பஸ்களால், அரசுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 34.56 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுகிறது.
எனவே, விதிமீறும் வெளிமாநில பதிவெண் ஆம்னி பஸ்கள் குறித்து, கடந்த 18ம் தேதி முதல் தீவிர தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநிலம் முழுதும் 62 ஆம்னி பஸ்கள் விதிமீறல்களுக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இவ்வகை ஆம்னி பஸ்கள், அவற்றின் உரிமையாளர்களால் இயக்கப்படவில்லை.
ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர், என்னையும், போக்குவரத்து ஆணையரையும் சந்தித்து, அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும், 200க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை, தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
அனைத்து பஸ்களின் இயக்கத்தையும் முறைப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஏ.ஐ.டி.பி., எனப்படும் அகில இந் திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று, விதிப்படி இயங்கும் ஆம்னி பஸ்களுக்கு தடையில்லை.
விதிமீறி இயக்கப்படும் பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் மட்டுமே முடக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

