ஷாக் அடித்து தாய், மகன் பலி : குன்னூரில் நடந்த சோக சம்பவம்
ஷாக் அடித்து தாய், மகன் பலி : குன்னூரில் நடந்த சோக சம்பவம்
ADDED : ஜூலை 08, 2024 10:00 PM

குன்னுார்: குன்னுார் காட்டேரி அருகே காணாமல் போன தாயை தேடி சென்ற போது, மின்சாரம் தாக்கி தாய் இறந்த இடத்தில், மகனும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் காட்டேரி பகுதியை சேர்ந்தவர் மெஹ்ரூன்,71. இவர் கடந்த, 5 தேதி காணாமல் போன நிலையில், பல இடங்களிலும் தேடி வந்தனர். இந்நிலையில், காட்டேரி அருகே புதர்கள் சூழ்ந்த பகுதியில் மாலை, 5:30 மணிக்கு சிலர் தேடி உள்ளனர். அப்போது, மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த தாயின் உடலை துாக்க சென்ற அவரது மகன், பைரோஸ் கான்,49, மீதும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் மற்றவர்களை நெருங்க விடாமல் தடுத்தனர்.
தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுக்கப்பட்டு, குன்னுார் அரசு மருத்துவமனையில் பெரோஸ் கானை சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த பைரோஸ் கான் கோவை மாவட்டம் கண்ணப்பன் நகர் பகுதியில் கனரக டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள்; ஒரு மகனும் உள்ளனர்.
மேலும், காட்டேரி பகுதிக்கு தேடுதல் பணிக்கு சென்ற ஆகாஷ், 21, என்பவருக்கும் மின்சாரம் தாக்கியதில், குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் கூறுகையில், 'இந்த பகுதியில் மின்சார 'எர்த்' ஒயர் ஒன்று தொங்கியதில், அதனால், தாய் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்த கிடந்தை பார்த்த மகன் அலறியடித்து ஓடிப்போய் தாயை துாக்கிய போது, மின்சாரம் தாக்கி அவரும் உயிரிழந்துள்ளார்,' என்றனர்.
இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குன்னுாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.