ADDED : ஆக 03, 2024 12:43 AM
சென்னை:சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பு:
அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என, அனைத்து இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
அதன்படி, சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி படிப்புக்கான சேர்க்கைக்கு, https://www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில், நாளை முதல், 27ம் தேதி மாலை 5:00 மணி வரை, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தபால் வாயிலாக, 27ம் தேதி அன்று மாலை 5:30 மணிக்குள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.