கூவத்தில் கொட்டப்பட்ட மண், கட்டட கழிவுகள்: அகற்ற ரூ.50 கோடி கேட்கிறது நீர்வளத்துறை
கூவத்தில் கொட்டப்பட்ட மண், கட்டட கழிவுகள்: அகற்ற ரூ.50 கோடி கேட்கிறது நீர்வளத்துறை
ADDED : மே 17, 2024 01:29 AM

சென்னை: கூவம் ஆற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்த நிறுவனம் கொட்டிய மண் மற்றும் கட்டட இடிபாடுகளை அகற்ற, அந்நிறுவனத்திடம் நீர்வளத்துறை 50 கோடி ரூபாய் கேட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், வடகிழக்கு பருவ மழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
மாசடைந்துள்ளது
இம்மாவட்டங்களில் உள்ள அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு ஆகியவற்றில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளதால், வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது.
மேலும், கூவம், பகிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது.
இவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, நீர்வளம், சுற்றுச்சூழல், வருவாய், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, சென்னை நிரந்தர வெள்ள தடுப்பு அறக்கட்டளை, அ.தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
இதன் வாயிலாக, கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்தும் பணிகள் படிப்படியாக செய்யப்பட்டு வந்தன. சிந்தாதிரிபேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் எதிர்ப்புக்கு இடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
இதனால், அங்கு ஆக்கிரமிப்புகள் முழுமையாக தடுக்கப்பட்டு, கூவம் ஆறு அகன்று விரிந்துள்ளது. ஆனாலும், கழிவுநீர் கலப்பு தொடர்ந்து வருகிறது.
கழிவுநீரில் குப்பை உள்ளிட்டவை அடித்து செல்லாத வகையில், சிந்தாதிரிபேட்டையில் ஆற்றின் குறுக்கே வலையும் அமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ச்சியான பணிகளுக்கு, தி.மு.க., ஆட்சியில் இன்னும் நிதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான இரண்டடுக்கு மேம்பாலச் சாலை திட்டத்திற்காக, கூவத்தில் துாண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நீரோட்டம் பாதிப்பு
இப்பணியை, மும்பையைச் சேர்ந்த ஜே.குமார் என்ற கட்டுமான நிறுவனம் செய்து வருகிறது. துாண்கள் அமைப்பதற்கு வசதியாக, பல்வேறு இடங்களில் மண் பரிசோதனையின் போது சேகரிக்கப்பட்ட மண் மற்றும் கட்டட இடிபாடுகள், கூவத்தின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் கொட்டப்பட்டு வருகின்றன.
இதனால், மழை காலத்தில் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு, பல்வேறு பகுதிகள் மூழ்கும் நிலை உருவாகியுள்ளது. மண் மற்றும் கட்டட இடிபாடுகளை பருவ மழைக்கு முன் அகற்றுவதாக, ஒப்பந்த நிறுவனம் வாய்மொழியாக உறுதி அளித்துள்ளது.
இதை ஏற்று, அங்கு கட்டட இடிபாடுகளை கொட்டுவதற்கு, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அனுமதி வழங்கியுள்ளார். கட்டட இடிபாடுகளால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, நம் நாளிதழில் 14ம் தேதி செய்தி வெளியானது.
இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகளிடம், அரசு தரப்பில் விளக்கம் கேட்டுள்ளது. விழித்துக் கொண்ட அதிகாரிகள், தனியார் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், கூவத்தில் கட்டட இடிபாடுகள் மற்றும் மண்ணை கொட்டி நிரப்புவதற்கு, அரசிடம் இருந்து தடையின்மை சான்று பெற வேண்டும்.
கொட்டிய மண் மற்றும் இடிபாடுகளை குறித்த நேரத்தில் அகற்ற முடியாவிட்டால், அப்பணியை மேற்கொள்ள நீர்வளத்துறைக்கு, 50 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று பெய்த மழையால், கூவத்தில் கொட்டிய மண் மற்றும் கட்டட இடிபாடுகள் கரைந்து, நீரில் வெளியேற துவங்கியுள்ளன.

