இறந்தவர் உடலை மாற்றி வழங்கிய அதிகாரிகள் ரூ.30 லட்சம் இழப்பீடு கோரி மகன் மனு
இறந்தவர் உடலை மாற்றி வழங்கிய அதிகாரிகள் ரூ.30 லட்சம் இழப்பீடு கோரி மகன் மனு
ADDED : ஆக 30, 2024 02:09 AM
சென்னை:தந்தையின் உடலை, வேறொரு குடும்பத்துக்கு வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், தன் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கூலி வேலை
திருவாரூர் மாவட்டம், இலவங்கார்குடியை சேர்ந்த ராஜி என்பவர் தாக்கல் செய்த மனு:
என் தந்தை ராஜேந்திரன்; காரைக்காலில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவார்.
கடைசியாக, என் தந்தையை ஜூன் மாதம் திருநள்ளாறில் பார்த்தேன். அவருக்கு மொபைல் போன் பயன்படுத்த தெரியாது.
கடந்த 14ம் தேதி, காரைக்கால் சிறப்பு எஸ்.ஐ., ராஜேந்திரன், என் வீட்டுக்கு வந்து புகைப்படம் ஒன்றை காண்பித்து, ஜூலை 22ல் தந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மறுநாள் தந்தையின் உடலை பெற குடும்பத்தினருடன், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, தந்தையின் உடலுக்கு பதிலாக வேறொருவரின் உடலை காட்டினர். தந்தையின் உடலை வேறொரு குடும்பத்திடம் வழங்கியது தெரியவந்தது.
காரைக்கால் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம், கவனக்குறைவால் இச்சம்பவம் நடந்துள்ளது. தந்தையின் உடலை பெற்ற வேறொரு குடும்பத்தினர், 15 நாட்களுக்கு முன் இறுதி சடங்குகள் முடித்தது தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில், இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதிகாரிகளின் இந்த செயல்பாடு, தந்தை இறப்பில் சந்தேகத்தை உருவாக்குகிறது. இயற்கை மரணம் போல தெரியவில்லை.
ஒப்படைக்கப்படும்
அலட்சியம் மற்றும் பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸ், மருத்துவமனை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை, காரைக்கால் கலெக்டர் உள்ளிட்டோர் எடுக்க வேண்டும்.
டி.என்.ஏ., உள்ளிட்ட அறிவியல்பூர்வ சோதனையை நடத்தி, என் தந்தையின் உடலை ஒப்படைப்பதோடு, குடும்பத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதுச்சேரி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தவறுதலாக சேலத்தை சேர்ந்த குடும்பத்துக்கு, மனுதாரரின் தந்தை உடல் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
'அவரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. அந்த உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்' என்றார்.
இதையடுத்து, மனுவுக்கு புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, செப்., 4க்கு விசாரணையை தள்ளிவைத்தார்.