சீன சிகரெட் லைட்டருக்கு தடை முதல்வருக்கு சபாநாயகர் கடிதம்
சீன சிகரெட் லைட்டருக்கு தடை முதல்வருக்கு சபாநாயகர் கடிதம்
ADDED : ஆக 01, 2024 01:54 AM
சென்னை:தீப்பெட்டி உற்பத்தி தொழிலை கடுமையாக பாதிக்கும், 'சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்'கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு, சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தீப்பெட்டி உற்பத்தி தொழில்கள் அதிகம்.
கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள், சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக, தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிப்படைந்தது.
அதைத் தொடர்ந்து, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கும்படி மத்திய அரசுக்கு, 2022 செப்., 8ல் கடிதம் எழுதப்பட்டது.
இதன் காரணமாக, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் களுக்கு மத்திய அரசு தடை விதித்தது; வெளிநாட்டு தீப்பெட்டி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.
தற்போது சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், வட நாட்டு கம்பெனிகள் அதை தயாரிக்கும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, சிகரெட் லைட்டர்களை தயாரித்து, 8 முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
இதனால், தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த சூழலில் அந்தமான் நிகோபார் தீவில் சுற்றுச்சூழல் விதிகளின் கீழ், பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனையை தடை செய்து, அறிவிப்பாணை வெளியிட்டு உள்ளனர்.
அதேபோல், தமிழகத்திலும் அறிவிப்பாணை வெளியிட்டால், தங்கள் தொழிலுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.