ஸ்ரீரங்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை விடுதலை செய்த உத்தரவு ரத்து கல் குவாரியில் தொழிலாளி பலியான வழக்கு
ஸ்ரீரங்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை விடுதலை செய்த உத்தரவு ரத்து கல் குவாரியில் தொழிலாளி பலியான வழக்கு
ADDED : மார் 09, 2025 02:24 AM
சென்னை: கரூர் அருகே கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில், தொழிலாளி பலியான வழக்கில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டியை விடுதலை செய்து, கரூர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மனு தாக்கல்
ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., வாக பழனியாண்டி உள்ளார். இவருக்கு சொந்தமாக, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல் உடைக்கும் ஆலை உள்ளது.
இந்த ஆலையில், 2016 செப்டம்பரில் நடந்த விபத்தில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற தொழிலாளி இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்தி அடிப்படையில், ஆலையில் ஆய்வு செய்த திருச்சி தொழில் பாதுகாப்பு துறை துணை இயக்குநர், பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், பழனியாண்டிக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், வழக்கில் இருந்து பழனியாண்டியை விடுதலை செய்தது. அதை, கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.
மறு ஆய்வு
இந்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி, திருச்சி தொழில் பாதுகாப்பு துறை துணை இயக்குநர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:
ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாததால் தான், தொழிலாளி பலியாகி உள்ளார்.
இது, சக தொழிலாளர்களின் வாக்குமூலத்தில் இருந்து தெளிவாக தெரிகிறது. எனவே, வழக்கில் இருந்து, பழனியாண்டியை விடுதலை செய்து, கரூர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன.
வழக்கை, கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் சட்டப்படி மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். மறு ஆய்வு மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.