ஸ்ரீவி.,- மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை உயர்வு
ஸ்ரீவி.,- மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை உயர்வு
ADDED : ஜூன் 10, 2024 12:44 AM
கம்பம் : 'விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் மே 23 முதல் 25 வரை நடந்த கணக்கெடுப்பில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறையினரின் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளால் யானைகள் எண்ணிக்கை சரிவிலிருந்து மீண்டு வருகிறது. 2023ல் நடந்த கணக்கெடுப்பின்படி கர்நாடகாவில் 6,395 யானைகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2017 க்கு பின் அங்கு 345 யானைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த கணக்கெடுப்பின்படி 2961 யானைகள் இருந்தன.
இந்நிலையில் மே 23 முதல் 25 வரை ஸ்ரீவில்லிப்புத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பை வனத்துறையினர் நடத்தினர்.
தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஒரே நேரத்தில் இக்கணக்கெடுப்பு நடந்தது.
இதுகுறித்து மேகமலை புலிகள் காப்பக வனத்துறையினர் கூறியதாவது: மூன்று நாட்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வனத்துறையினர், வனவியல் படிக்கும் மாணவர்கள் உட்பட 200 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். மேகமலை பகுதியில் யானைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்த்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கணக்கெடுப்பு விபரங்கள் தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து அண்டை மாநிலங்களுடன் ஒப்பீடு செய்து விரைவில் அறிவிக்கப்படும்.
மேகமலை பகுதியில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு யானைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது என்றனர்.

