மீனவர் பிரச்னைக்கு தீர்வு ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
மீனவர் பிரச்னைக்கு தீர்வு ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
ADDED : ஆக 24, 2024 10:44 PM
சென்னை:'தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம்' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள், நேற்று முன்தினம் விசைப்படகில், கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை, 324 மீனவர்கள், 44 படகுகள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கைகளால், தமிழக மீனவ சமூகத்தினர் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், கடலில் மீனவர்களை தாக்கியுள்ளனர்.
இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம். எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைந்து விடுவிக்க, உறுதியான துாதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.