தமிழர்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழர்களை அவதூறு செய்வதை நிறுத்துங்கள்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
ADDED : மே 21, 2024 01:15 PM

சென்னை: 'பிரதமர் மோடி ஓட்டுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழத்தின் மீதும் தமிழக மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். ஓட்டுக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல் திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து ஓட்டு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல.
அவதூறு செய்ய வேண்டாம்!
முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும், பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாக தமிழக மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழகத்தில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழக மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.
திருடர்கள்
ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழக மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது?. ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா?. தமிழக மக்களை நேர்மை யற்றவர்கள் என்று கூறுவது, தமிழகத்தை அவமதிப்பது அல்லவா?. தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?.
இரட்டை வேடம்
தமிழகத்துக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் ஓட்டு சேகரிக்கும் போது தமிழக மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம்.
இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஓட்டுக்காகத் தமிழத்தையும், தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடி ஓட்டுக்காக மக்களை அவதூறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

