'ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்டு ஒப்படைக்காவிட்டால் போராட்டம்'
'ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்டு ஒப்படைக்காவிட்டால் போராட்டம்'
ADDED : மே 13, 2024 03:30 AM
சென்னை : முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்:
ஆளவந்தார் தன் கடுமையான உழைப்பால் சேர்த்த, செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் உள்ள, 1,550 ஏக்கர் நிலங்களை, இறைப்பணிக்காக வழங்கினார்.
அவர் எழுதி வைத்த நிலங்களில், இறைப்பணிக்கான தேவை போக, மீதியை கல்விப்பணிக்கு பயன்படுத்தலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துக்களை, அவரது நோக்கங்களுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாமல்லபுரத்தை ஒட்டிய பேரூர் என்ற இடத்தில், தினமும், 40 கோடி லிட்டர் திறன் உடைய கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இது, தென்சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக கடல் நீரை குடிநீராக்கும் மூன்றாவது ஆலை. இந்த திட்டத்திற்காக அறக்கட்டளைக்கு சொந்தமான, 85.51 ஏக்கர் நிலம், ஹிந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து, குத்தகை அடிப்படையில் அரசால் பெறப்பட்டுள்ளது.
தென்சென்னைக்கு குடிநீர் வழங்க, ஏற்கனவே இரு இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்காக, அறக்கட்டளைக்கு சொந்தமான, 125 ஏக்கர் நிலங்கள், தமிழக அரசால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பரதமுனிவர் பண்பாட்டு மையம் அமைக்க, 5 ஏக்கர் நிலம்; சூரிய ஒளி மின் திட்டத்தை செயல்படுத்த மின்சார வாரியத்திற்கு, 564 ஏக்கர் நிலம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு, 210 ஏக்கர் நிலம் என, அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
இவை ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிரானவை.
நிலங்கள் தாரை வார்க்கப்படுவதை நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். ஆளவந்தாரின் நோக்கங்களுக்கு எதிரான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அனைத்து நிலங்களையும் மீட்டெடுத்து, அறக்கட்டளையிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.
இல்லையேல், தமிழகம் இதுவரை காணாத வகையில் போராட்டம் நடக்கும். அதற்கு, தமிழக அரசு வழிவகுத்து விடக்கூடாது.
இவ்வாறு கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.